
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் போது, தினகரனை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என சசிகலாவிடம் கூறியதாக டி.டி.வி.தினகரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிறகு பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.
அவர் சிறை செல்வதற்கு முன்பு டி.டி.வி.தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமித்தார். ஆனால் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரலாமா என கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா தன்னை கட்சியில் இருந்து நீக்கினாலும், நிறைய கட்சிப் பணிகளை என்னை அழைத்துத் தான் செய்யச் சொல்லுவார் என தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவரும்,அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அவரை பார்த்து நலம் விசாரித்தாக குறிப்பிட்டார்.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இனி என்னால் முழுமையாக செயல்பட முடியுமா என தெரியவில்லை, எனவே டி.டி.வி.தினகரனை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என சசிகலாவிடம் தெரிவித்தாகவும் டி.டி.வி.தினகரன் கூறினார்.