கொளத்தூர் நகைக்கொள்ளையர்களை பிடிக்கச் சென்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இவர்களை பிடிக்க கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முடுனிசேகர், மதுரவாயில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.
ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன், பெரியபாண்டியனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு வந்தார்.
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் அவரது மனைவி பானுரேகா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வீட்டில் இருந்த பெரியபாண்டியனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். உயிரிழந்த பெரியபாண்டியனின் மகன்களின் கல்வி விவரம் மற்றும் அவர்களுக்கு உடனடியாக உதவி எதுவும் தேவையா? என்பதை குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ’’கொடூரமான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு போலீஸ் படையினர் செல்லும்போது கூடுதல் எண்ணிக்கையில் அனுப்பவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நேர்மையும் துணிச்சலும் மிகுந்த பெரியபாண்டியனை இழந்திருக்க மாட்டோம் என கூறினார்.