அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்து, சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சி ஆகியவற்றை பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை அரசியல் செய்வதற்கு தங்களது அணிக்கு அரசியல் ரீதியான அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்த தினகரன், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் மூன்று கட்சி பெயர்களை வழங்கி, அவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறும் கோரினார்.
தினகரனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து பொதுக்கூட்டத்தை கூட்டி இயக்கத்தின் பெயரையும் கொடியையும் அறிவித்தார். அதிமுகவின் கொடியை போன்றே கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியின் நடுவே ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதைதொடர்ந்து டிடிவி தினகரன் அமைப்பு கொடியை பயன்படுத்த தடை விதிக்க கோரி இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று தினகரன் அறிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.