முதியவர்களுக்கு கொடுத்த சலுகையைக் குத்தி காட்டுவீங்களோ..? கட்டண சலுகையை சொல்லிக்காட்டிய ரயில்வேயிக்கு திருச்சி சிவா டோஸ்!

By Asianet TamilFirst Published Aug 1, 2019, 6:07 AM IST
Highlights

யார் ஒருவரும் பசியைக்கூட பொறுத்துக் கொள்வார்; ஆனால், இப்படிப்பட்ட அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். முதியவர்களின் தன்மானத்தைச் சீண்டக்கூடிய இந்த வாசகங்கள் எதற்காக பயண டிக்கெட்டில் இருக்க வேண்டும்?
 

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டணத்தில் வழங்கப்படும் சலுகையைச் சொல்லிக் காட்டுவது ரயில்வே துறை கைவிட வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சீனியர் சிட்டிசன்களுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதும் உண்டு. சீனியர் சிட்டிசன்களுக்கு பயன் அளிக்கக்கூடிய இந்த கட்டண சலுகைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. இந்நிலையில் ரயில்வே டிக்கெட்டுகளில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகையால், “43 சதவீத டிக்கெட் கட்டணத்தை பிற மக்களின் தலையில் ஏற்றுவது உங்களுக்குத் தெரியுமா?” என்று அச்சடித்துக்கொடுப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில், இந்தக் குத்திக் காட்டும் பேச்சை நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசினார். அப்போது அவர், “ரயில் பயணங்களில் 60 வயதைக் கடந்த சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் பயண  டிக்கெட்டுகளின் பின்புறம், 'உங்களுடைய மொத்த பயணக் கட்டணத்தில், 43 சதவீத கட்டணத்தை, பிற சாதாரண மக்கள் ஏற்பதை நீங்கள் அறிவீர்களா?' என ரயில்வே துறை குறிப்பிடப்பட்டுள்ளது.


வயதான காலத்தில் மற்றவர்கள் தயவில் வாழ்க்கையை ஓட்டி, இறுது காலத்தில் உள்ள முதியர்களுக்கு சலுகையை அரசு அளித்து விட்டு, அவர்களை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? யார் ஒருவரும் பசியைக்கூட பொறுத்துக் கொள்வார்; ஆனால், இப்படிப்பட்ட அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். முதியவர்களின் தன்மானத்தைச் சீண்டக்கூடிய இந்த வாசகங்கள் எதற்காக பயண டிக்கெட்டில் இருக்க வேண்டும்?
இந்த விவகாரம் ரயில்வே அமைச்சருக்கு தெரியாது என்றே நினைத்தேன்.ஆனால், அவருக்கு தெரிந்தே இது நடந்திருக்கிறது.  ஒரு நாடு, குடிமகன்களுக்கு சலுகைகளை தருவதற்கு முன், அவர்களுடைய சுயமரியாதையும் தன்மானத்தையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பெயர்தான் ஜனநாயக நாடு. எனவே ரயில்வே டிக்கெட்டின் பின்புறம் முதியவர்களின் தன்மானத்தை குலைக்கும் வாசகங்களை, மத்திய அரசு உடனே நீக்க வேண்டும்” என்று திருச்சி சிவா காட்டமாகப் பேசினார். 

click me!