தேசத்துரோக வழக்கு எனக்கு புதுசு இல்ல..! அடங்காமல் அசால்ட்டு காட்டும் சீமான்..!

By Manikandan S R SFirst Published May 12, 2020, 3:39 PM IST
Highlights

தன் மீது போடப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு புதியது இல்லை என்றும் மூன்றாவது முறையாக தற்போது பதியப்பட்டிருக்கும் வழக்கையும் தான் சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் மீது ஏற்கனவே அரசுக்கு எதிராக பேசியதாக பல்வேறு வழக்குகள் காவல் துறையில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேசியதற்காக சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவுதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அப்போராட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே கோவை ஆத்துப்பாலம் அருகே பிப்ரவரி 22 ஆம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பாக சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேசத்துரோகம், உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசத்துரோக வழக்கு தனக்கு புதியது இல்லை என்று சீமான் கூறியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழர் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வழங்கினார். அப்போது நிருபர்களிடம் கூறிய அவர் தன் மீது போடப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு புதியது இல்லை என்றும் மூன்றாவது முறையாக தற்போது பதியப்பட்டிருக்கும் வழக்கையும் தான் சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாக கூறினார். திமுகவினர் மதுவுக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறிய சீமான் அதிக சாராய ஆலைகளை வைத்திருக்கும் திமுகவினர் அவற்றை அரசுக்கு வினியோகிக்க மாட்டோம் என்றும் சாராய ஆலைகளை மூடுவோம் என்றும் கூறாத நிலையில் அவர்களின் போராட்டம் மலிவான அரசியல் என்றார்.

மேலும் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பதை விமர்சித்த சீமான் அதை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம் என்றார்.

click me!