குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை பணியிடமாற்றம் செய்வது களங்கம் ஆகாது.. சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 3:19 PM IST
Highlights

குற்ற வழக்குகளில் தொடர்புடைவரை  பணியிடமாற்றம் செய்வதை, களங்கம் எனக் கூறி கேள்வி எழுப்ப முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தொடர்புடைவரை  பணியிடமாற்றம் செய்வதை, களங்கம் எனக் கூறி கேள்வி எழுப்ப முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மூத்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சீனிவாசன் என்பவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்கு ஒன்று சேலம் நீதிமன்றத்தில் விசாரணையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்கள் வாதத்துக்கு ஒத்திவைப்பட்டுள்ள நிலையில், சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில்,  சீனிவாசனை சேலத்திலிருந்து திருப்பூருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்த  உத்தரவை ரத்து செய்யக்கோரி சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியாநாதன் முன்பு விசாரணைக்கு வந்தப்போது, மனுதாரர் தரப்பில் சாட்சி கலைத்து விடுவேன் என கூறுவது வெறும் யூகம் மட்டும் என்றும், இது தன் பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும் வாதிடப்பட்டது. அதேசமயம், நிர்வாக அடிப்படையில் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூறமுடியாது எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக இடமாற்றம் செய்யலாம் எனவும், அநத நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். நம்பிக்கை மோசடி மற்றும் குற்ற வழக்கில் தொடர்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிமாற்றம் செய்யலாம் எனவும், அதை களங்கம் விளைவிப்பதாக கருதி கேள்வி எழுப்ப முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சீனிவாசனுக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்து மே மாத இறுதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, சீனிவாசனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். 

 

click me!