டி.டி.வி.தினகரன் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைய முடியுமா ? எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் இன்று முக்கிய முடிவு !!

First Published Aug 1, 2017, 8:10 AM IST
Highlights
today a meeting for admk party secretaries and ministers headed by EPS


அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வரும் 5 ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கப் போதாக அறிவித்துள்ள நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அ.தி.மு.க. அணிகளின் இணைப்புக்காக ஆகஸ்டு 4–ந் தேதி வரை காத்திருப்பேன் என்று 60 நாள் காலக்கெடுவை டி.டி.வி.தினகரன் விதித்திருந்தார். அவர் விதித்த காலக்கெடு இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது. ஆனால் அ.தி.மு.க. இணைப்பு முயற்சி இதுவரையில் நடக்கவில்லை.

இதையடுத்து 5 ஆம்  தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்து கட்சி பணிகளில் டி.டி.வி.தினகரன் ஈடுபட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.



டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் வருகை செய்தி, பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றுமாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.



இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு அவசர அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் கட்சியும், ஆட்சியும் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கருதுகின்றனர்.

எனவே டி.டி.வி.தினகரன் வருகை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். தற்போது போன்றே கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பை சாத்தியமாக்குவதற்கு, அதில் உள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும்  அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

click me!