டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கம்… தமிழக அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 27, 2019, 11:05 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில்  தமிழ் பாடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தமிழுக்குப்  பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தமிழக மாணவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது..

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும்.


 
இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

இதேபோன்று குரூப் 2ஏ தேர்வானது பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க், ஸ்டெனோ - டைபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், மூன்று நிலைகள் அல்லாமல் ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டுமே நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது. 

இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இந்தாண்டு நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ் தாள்  நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

click me!