+2 பொதுத்தேர்வு குறித்து 60 சதவீதம் பேர் சொன்ன கருத்து... இன்று முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2021, 11:08 AM IST
Highlights

அனைவரது கருத்துக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்க உள்ளார். 

மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததை அடுத்து, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கடந்த 2ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோரது கருத்துக்களை பெற்று தெரிவிக்கும் படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிய ஆன்லைன் மூலம் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தங்களுடைய பிள்ளைகளுடன் ஆஜரான ஏராளமான பெற்றோர்கள் +2 பொதுத்தேர்வை நடத்துவது தான் சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக கல்வியாளர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களில் 60 சதவீதம் பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இன்று  மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு மருத்துவ நிபுணர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் நல சங்கங்கள் ஆகியவற்றுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரது கருத்துக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்க உள்ளார். அதன் பிறகு அரசின் இறுதி முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என தெரிகிறது.

click me!