ரெடி டு கோ சபரிமலை ! கொச்சி விமானநிலையம் வந்திறங்கினார் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் !!

By Selvanayagam PFirst Published Nov 26, 2019, 8:42 AM IST
Highlights

இந்த சீசனில் சபரிமலை செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் பிந்து என்ற இளம் பெண் உட்பட குழு வந்துள்ளது.
 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது. 

ஆனால்,சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சமூக ஆர்வலர் ஃபாத்திமா ரஹானா சபரிமலை செல்வதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுத்துவிட்டது. 

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வருகை தந்துள்ளார். திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய்,  இன்று அரசியலைமைப்பு தினம் ஆகும். எங்களை யாராவது தடுத்து நிறுத்த முயற்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம். நான் சபரிமலை வருவது குறித்து ஏற்கனவே, நான் முதலமைச்சர்  மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்” என்றார். 

சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக் கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் உள்ளிட்ட 7 பேர் மனு அளித்துள்ளனர்.

click me!