எடப்பாடி ஏரியாவில் மூன்று சீனியர்கள்... தலைவலியில் அமைச்சர் செந்தில் பாலாஜி... திணறும் திமுக..!

By Thiraviaraj RMFirst Published Jun 10, 2021, 2:50 PM IST
Highlights

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்த கூத்து எல்லாம் தெரிந்தாலும் கூட, இப்போதைக்கு உட்கட்சி பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம் என்ற சிந்தனையோடு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள் கருர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விட்டது. சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல, தற்போதைய தேர்தலிலும் சேலம் மாநகர மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வெற்றிப் பெற்றிருக்கிறார். இவர் உள்பட மற்ற மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களான, முறையே டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் திமுக எம்.பி.பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு ஏற்ற எஞ்சிய 10 தொகுதிகளிலும் திமுக.வுக்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸுககும் வெற்றி கிடைக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் திமுக.வுக்கு ஏற்பட்ட தோல்வியை, மு.க.ஸ்டாலினால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த கோபத்தில்தான், ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார்.

சேலம் மாவட்ட திமுக.வில் உள்ள கோஷ்டிப் பூசலை சரி செய்து, மிகுந்த எழுச்சியுடன் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் ஆற்றும் வகையில் திமுக நிர்வாகிகளை தயார் செய்யும் பணியை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார் மு.க.ஸ்டாலின். அமைச்சரின் அதிரடி பற்றி எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றிலும் வேகம் காட்டுவதுதான் அவரது பிறவிக்குணம். இருந்தாலும் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளைப் பொறுத்தவரை, டி.எம்.செல்வகணபதி, வழக்கறிஞர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய மூன்று பேருமே சீனியர்கள்.

இந்த மூன்று பேரையும் லாவகமாக கையாளும் கலையை அமைச்சர் செந்தில்பாலாஜி கற்றிருந்தாலும், மூன்று பேரும் மூன்று திசைகளில் நிற்பதால், கொரோனோ தடுப்புப் பணிகளை கையாள்வதை விட, சீனியர்களான மூன்று நிர்வாகிகளையும் கையாள்வதுதான் அமைச்சருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கறிஞர் ராஜேந்திரனைப் பொறுத்தவரை, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியுடனேயே இருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும்போது அவரது காரில் ஏறுவதற்கே கூச்சப்படுகிறார். தேசியக் கொடி கட்டிய காரில் தனித்து பயணிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு இல்லாததால், அவருடைய சொந்தக் காரிலேயே அமைச்சரை பின்தொடர்கிறார்.

எம்.எல்.ஏ., என்பதால், ராஜேந்திரனுக்கு ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் உரிய மரியாதை கிடைப்பதால், அவரளவுக்கு அவர் ஹேப்பிதான். ஆனால், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. 1991-96 ஆம் ஆண்டுகளிலேயே அமைச்சராக இருந்தவர். இப்போது எம்.எல்.ஏ., எம்.பி பதவி போன்றவை இல்லாததால், அரசு உயரதிகாரிகள் மத்தியில் அவருக்கு மரியாதை கிடைப்பதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரைச் சுற்றி அரசு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு டி.எம்.செல்வகணபதி சென்றார். அவரைப் பார்த்ததும் அமைச்சர் வணக்கம் சொல்லி, ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், அங்கேயே அமரச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு காலியான இருக்கைகள் எதுவும் இல்லாததால், சிறிது நேரம் நின்று விட்டு திரும்பிவிட்டார் டி.எம்.செல்வகணபதி. அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அதிகமாக அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

கிழக்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், பழுத்த அரசியல்வாதி. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடமே குப்பை கொட்டியவர் என்பதால், நெளிவு, சுழிவுடன் நடந்து கொள்கிறார். இருந்தாலும் கூட அமைச்சர் செந்தில்பாலாஜியோடு அதிகமாக நெருங்குவதில்லை. இப்படி மூன்று மாவட்ட பொறுப்பாளர்களும் அமைச்சர் செந்தில்பாலாஜியோடு தாமரை இலை தண்ணீர் போல பழகி வருவதால், திமுக எம்.பி. பார்த்திபனும், முன்னாள் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் புதல்வருமான வீரபாண்டி ஆ.ராஜாவும் அமைச்சர் செந்தில்பாலாஜியோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் செய்து வரும் சேட்டைகளால், வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பல நேரங்களில் கடுப்பாகிவிடுகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்த கூத்து எல்லாம் தெரிந்தாலும் கூட, இப்போதைக்கு உட்கட்சி பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம் என்ற சிந்தனையோடு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள் கருர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.

click me!