நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை.
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, எல்லோரும் எனக்காக மரியாதை செய்யவில்லை, என்னுள் இருக்கிற அந்த சக்தியைதான் வணங்குகிறார்கள் என அன்னபூரணி அரசு அம்மா விளக்கம் அளித்துள்ளார். அன்னபூரணி போலி சாமியார் என்றும், இவரை இப்போதே ஒடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக அன்னபூரணி அம்மா என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பெண் சாமியார் ஒருவர் தொடர்பான காணொளிகள் பரவி வருகிறது. அதில் மஞ்சள் சிவப்பு என பள பளக்கும் புடவை, உதட்டில் லிப்ஸ்டிக் என சினிமா நடிகை போல காரிலிருந்து கெத்தாக இறங்கிவந்து தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு அவர் அருள்பாலிப்பது போன்று அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. அவருக்கு பூ, பன்னீர் தூவும் ஒரு கூட்டம், தன்னை அம்மனாகவே பாவித்துக் கொண்டு பரவசமடையும் அன்னபூரணி, அதனால் அவரை சுற்றி உள்ளவர்கள் தங்கள் நிலையை மறந்து கதறிக் கதறி அழுவது போன்ற காட்சிகளும் அந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது. இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. யார் இந்த அன்னபூரணி, திடீரென சாமியார் கோலத்தில் என்று பலரும் ஆச்சரியத்துடன் அந்த வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் அறிவித்துள்ளார். செங்கல்பட்டில் வரும் புத்தாண்டு 1 அன்று மக்களுக்கு அருள்வாக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்து, போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. பலரும் யாரிந்த அன்னபூரணி என கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தனது எதிர்வீட்டில் வசித்த லட்சுமி என்ற பெண்ணிக் கணவர் அரசு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்துக்கு வந்தவர்தான் அன்னபூர்ணி, கள்ளக்காதலுக்காக தான் கட்டிய கணவனையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு வேறொரு எதிர் வீட்டு பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அன்னபூரணி.
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீ செய்வது தவறு, இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பில் இருப்பது தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அன்னபூர்ணிக்கு எவ்வளவோ படித்து படித்து சொல்லியும், முடியவே முடியாது வாழ்ந்தால் அரசுவுடன்தான் வாழ்வேன் என அடுத்தவரின் கணவனை ஆட்டயப்போட்டவர்தான் இந்த அன்னபூர்ணி.
இப்படிப்பட்ட அன்னபூரணி திடீரென அம்மனாக அவதாரம் எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருவது போன்ற வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கள்ள காதலில் சிக்கிய அன்னபூரணி அடுத்த சில வருடங்களுக்குள் எப்படி சாமியாக அவதாரம் எடுத்தார் என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அன்னபூரணியின் கதை குழப்பமாக உள்ளது, மக்கள் எந்த அளவிற்கு ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதே இதன் மூலம் நேரடியாகவே பார்க்க முடிகிறது. அன்னபூரணி அருள்வாக்கு சொல்கிறேன் என்பதை பார்க்கும் பொழுது நகைச்சுவையாக உள்ளது என விமர்சித்துள்ளார். தற்போது எதிர்வீட்டு பெண்ணின் கணவன் அரசுவுடன் வீடி எடுத்து வசித்து வரும் அன்னபூரணி, அரசுவுடன் இணைந்து செங்கல்பட்டில் சிறிய அளவில் மடம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அடிக்கடி கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கும் வழங்கி வருகிறார். அவரை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து அருள்வாக்கு வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் எல்லா மூலைகளில் இருந்தும் மக்கள் அன்னபூரணியை தேடி வருகின்றனர். பல தீராத நோய்களுடன் வந்து அன்னபூரணியிடம் அருள்வாக்கு பெற்றுச் செல்கின்றனர், அப்படி அருள் வாக்கு பெற்றதால் தீராத நோய்களெல்லாம் இருந்ததாகவும் பக்தர்கள் கூறிவருகின்றனர். பல நோய்களை அன்னபூரணி தீர்த்து வைத்ததாகவும் பக்தர்கள் உணர்ச்சிவயப்பட்டு கூறுகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.
சொல்வதெல்லாம் பஞ்சாயத்தை அறிந்த பலரும், இது போன்ற போலி சாமியார்களை உடனே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நபர்களால் தான் இந்துமதத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது போன்ற போலி சாமியார்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தவேண்டும் என்று இணையதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அன்னபூரணியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, மக்களின் புகாரால் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி செங்கல்பட்டில் திருமண மண்டபத்தில் நடக்க இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதித்துள்ள நிலையில், அவரது நிகழ்ச்சிக்கு மண்டபம் கொடுக்க கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். அவருக்கெதிராக சமூகவலைதளத்தில் மக்கள் கொதித் தொழுந்ததால் அவர் தனது செல்போனை அணைத்து வைத்து தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை. என்னை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிற ஒரு உணர்வு. அப்படித்தான் மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலர் கொச்சைப் படுத்துகின்றனர். நானும் அரசுவும் இணைந்ததே இந்த நோக்கத்திற்காகத்தான். எங்கள் இருவருக்குள்ளும் ஒரே சக்தி தான் இருந்திருக்கிறது. அது இப்போது தான் எங்களுக்கு தெரிகிறது. நாங்கள் விரும்பி வேறு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கேயோ தலைமறைவாக இருந்து இருக்க முடியும். அந்த சக்தியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதனால்தான் ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறோம். அதனால்தான் நீங்கள் எங்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
என்னை அவமானப்படுத்துவதாலோ, என்னை புகழ்வதாலோ, எனக்குள் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னைப் பொறுத்தவரையில் நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவள், கடவுள் என்பதே இல்லை, அது ஒரு சக்தியாக இருக்கிறது. அது எனக்குள் இருக்கிறது என்று உணர்கிறார்கள். அதை நான் சொல்வதால் உங்களுக்கு புரிய போவது இல்லை, சிலருக்கு அது புரிந்ததால் தான் என்னை தேடி வருகின்றனர். எனது காலில் விழுந்து எனக்கு மாலை மரியாதை செய்யுங்கள் என்று நான் யாரிடமும் கேட்டதில்லை.அவர்களாகவே செய்கிறார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னை தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.