முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. ஆறாம் தேதி தடையை மீறி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர் என டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாஜகவினர் நடத்துவது ஆன்மீக யாத்திரை அல்ல அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பாஜகவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 100 மேற்பட்டோர் பொது இடங்களில் கூடக் கூடாது என தமிழக காவல்துறை டிஜிபியின் உத்தரவிட்டதை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் அதேபோல் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழக பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. அப்போது இந்த வேல் யாத்திரையில் எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள்,
எத்தனை வாகனங்கள் அதில் பங்கு பெறும் என்ற அறிக்கை தாக்கல் செய்து அது தொடர்பாக டிஜிபியிடம் மனு அளிக்கும் படி வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தடை மீறி செல்லப்பட்டது. அதில் சுமார் 10 வாகனங்களில் 30க்கும் மேற்பட்டோர் பயணிக்க மாட்டோம் என பாஜக தெரிவித்திருந்த நிலையில், வேலூரில் நடந்த யாத்திரைக்கு பாஜகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அங்கு அவர்கள் முகக் கவசம் அல்லது சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.
அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை போன்றோர் அத்துமீறி செயல்பட்டனர். இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக முகக் கவசம் அணியவில்லை, மத்தியில் ஆளும் பாஜக வினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். பல இடங்களில் காவல் துறையினரிடம் பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். முழுக்க முழுக்க வேலூரில் நடைபெற்ற யாத்திரை ஒரு அரசியல் யாத்திரை போல நடைபெற்றது. அதே வேலையில் அது கோவில் யாத்திரையே அல்ல, முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. ஆறாம் தேதி தடையை மீறி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர் என டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேலூரில் நடைபெற்ற யாத்திரையில் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர் எனவும் டிஜிபி தரப்பில் கூறப்பட்டது. அப்போது பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில்சென்னையில் நடைந்த ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், அங்கு சமூக இடைவெளியே, முகக் கவசமோ முறையாக அணியப்படவில்லை என்றும் கூறினர், உடனே இடைமறித்த நீதிபதிகள் தாங்கள் செய்த தவறுக்கு இன்னொரு விஷயத்தை மேற்கோள்காட்டி நியாயப்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர். பின்னர் தங்கள் கருத்தை பாஜகவினர் பின்வாங்கினர். அதுமட்டுமின்றி ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலமாக பாஜக யாத்திரையால் மக்கள் எவ்வாறெல்லாம் பாதித்தனர் என்பதை தாங்கள் தொலைக்காட்டி வாயிலாக பார்த்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.