இது ஆபத்தான முடிவு... உடனே கைவிடுங்க... எடப்பாடியாரை எச்சரிக்கும் கே.பாலகிருஷ்ணன்..!

By Asianet TamilFirst Published Jan 7, 2021, 9:56 PM IST
Highlights

தமிழகத்தில் தியேட்டரில் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிப்பது எனும் தமிழக அரசின் முடிவு அறிவியல் பூர்வமானதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்)மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் ஜனவரி 10-ம் தேதி முதல், 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்ப் பரவல் இன்னமும் நீடிக்கும் நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவு பொருத்தமற்றதாகும். திரையரங்குக்குச் செல்லும் பார்வையாளர்களுக்கு வேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான காரணமாகவும் இது அமைந்துவிடும்.


மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இன்னமும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. பொது நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் பொழுதுபோக்கிற்காக மக்கள் செல்லும் திரையரங்கத்தில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் அனுமதிப்பது எனும் தமிழக அரசின் முடிவு அறிவியல் பூர்வமானதல்ல.
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் குளிரூட்டப்பட்ட அரங்கில் மக்கள் நெருக்கமாக அமர்ந்திருப்பதால் கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலையும் மீறுவதாகும். மேலும், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் இத்தகைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக மருத்துவர் ஆலோசனைக் குழுவும் இதை சிபாரிசு செய்யவில்லை. எனவே, தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற தனது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

click me!