திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவர் படித்த திருக்குவளை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உருக்கமுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருவாரூர் அருகே உள்ள திருக்குவளையில் பிறந்தவர். சிறு வயதில் கருணாநிதி, திருவாரூரில் உள்ள வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தற்போது உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே திமுக தொண்டர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.