திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து !! தேர்தல் ஆணையம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 7, 2019, 6:35 AM IST
Highlights

திருவாரூர் இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களுக்காக அதனை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்  அறிவித்தது. . இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதி வரை  மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த தொகுதியில் திமுக  சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக  சார்பில் எஸ்.காமராஜும் அறிவிக்கப்பட்டிருந்தார். . ஆளும் அதிமுக சார்பில் இன்று காலை 10 மணிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தலைமைத் தேர்தல் ஆணையரை  சந்தித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு  அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்  நேற்று  முனதினம் தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்த நிர்மல்ராஜ், “நீங்கள் தெரிவித்த கருத்துகள் தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் ,ஏப்ரல் மாதத்திலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுடனோ சேர்த்து  காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

click me!