’மக்களவை தேர்தலோடு இதையும் செய்யுங்க...’ மு.க.ஸ்டாலினை வழிமொழிந்த திருமாவளவன்..!

By Asianet TamilFirst Published Feb 12, 2019, 11:49 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுகவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுகவைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் காலியாக 21 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு விருப்பு மனுவை வாங்கும்போது, காலியாக உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தகவல்கள் சிறகடித்துப் பறப்பதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருக்கிறது. 

மோடி மூலமாக இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அதிமுக காய் நகர்த்தி வருவதாக அரசியல் அரங்கில் பேச்சுகள் உலா வரத் தொடங்கிவிட்டன. இதனை கருத்தில்கொண்டுதான், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக  இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். பேரவைத் தலைவரால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளன. அது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில் அந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 

அதுபோலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளும் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. தற்போது ஓசூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி இழந்துள்ள நிலையில், அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் சுமார் 10 சதவீத தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதன்முறை. அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது. காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், கால விரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டுமின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுதான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலோடு காலியாக உள்ள இருபத்தொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார். 

click me!