
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து பயணித்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி கூறிய போது, வாழ்த்துக்கள், வரவேற்கிறேன் என பல தலைவர்களும் ஒதுங்கிக் கொள்ள,திருமாவளவன் மட்டும் தொடர்ந்து ஆதரவுக் கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.
ரஜினி மீதான திருமாவின் இந்த திடீர் பாசத்திற்கும்,பிணைப்புக்குமான காரணங்கள் குறித்து "ரஜினி அரசியலுக்கு வந்தால் திருப்புமுனை ஏற்படும் -கூட்டணிக்கு காய்நகர்த்துகிறாரா தொல்.திருமா?" என்ற தலைப்பில் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.
ரஜினியுடன் கூட்டணி வைக்கவே திருமாவளவன் விரும்புகிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரின் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு. அப்போது திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
ரஜினி கட்சி தொடங்குவதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் அரசியல் சூழ்நிலை சாதகமாக இருக்கும். மக்கள் பிரச்சனைக்காகத் தான் திமுக நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம்..." இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.