பின்பக்க கதவை உடைத்து உள்ளே செல்கிறீர்களே...நீங்க சிபிஐ அதிகாரிகள் தானா...? காண்டான திருமாவளவன்...!

By Asianet TamilFirst Published Aug 22, 2019, 12:00 PM IST
Highlights

சிபிஐ அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்துக்கொண்டு சில சிபிஐ அதிகாரிகள் உள்ளே வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தேவையில்லாமல் அவரை அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர் . இது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சிபிஐ,மற்றும் வருமானவரித்துறையை  இந்த அரசு தனது ஏவல் படையாக வைத்துள்ளது என்பதே, ப.சிதம்பரத்தினை கைது நடவடிக்கை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தனது அறிக்கையின் மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல.  சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திரு ப.சிதம்பரம் தலைமறைவாக இருக்கிறார் என்ற பொய்ச்செய்தியை மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தன் பெயரோ தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்த திரு ப. சிதம்பரம்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

‘உயிரா? சுதந்திரமா? எனத் தம்மிடம் கேட்கப்பட்டால் தான் சுதந்திரத்தைத்தான் தேர்வு செய்வேன்’ என்று உறுதிபடத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின் தனது வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டுக்குள் இருப்பது தெரிந்திருந்தும் ஊடகவியலாளர்கள் கண்முன்னாலேயே சிபிஐ அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்துக்கொண்டு சில சிபிஐ அதிகாரிகள் உள்ளே வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தேவையில்லாமல் அவரை அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர் . இது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணையின்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!