தமிழ்ச் சமூகம் செல்லரித்த கூட்டமாக மாறிவிட்டதோ... பட்டியல்போட்டு பதறும் வேல்முருகன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 3, 2020, 1:09 PM IST
Highlights


ஏழு வயது ஜெயப்பிரியா வன்புணர்வுக் கொலை. இத்தகைய தொடர் நிகழ்வுகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏழு வயது ஜெயப்பிரியா வன்புணர்வுக் கொலை. இத்தகைய தொடர் நிகழ்வுகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல்  மேலக்குடியிருப்பு. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நாகூரான்-செல்வி தம்பதியர். இவர்களின் 7 வயது மகள் ஜெயப்பிரியா. முந்தாநாள் காலையில் திடீரென ஜெயப்பிரியாவைக் காணவில்லை. இதனால் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவலர்கள் காணாமல்போன குழந்தையைத் தேடிவந்தனர். இந்நிலையில் அன்று மாலை சுமார் 4 மணிக்கு, அந்த ஊர் குளத்திற்குத் தண்ணீர் செல்லும் வழியில் கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்தார்கள்.
 
நெஞ்சைப் பிளக்கும் இந்த சம்பவம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.வே.அருண்சக்தி குமார் தலைமையில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தனர். 27 வயதான அந்த ராஜா பூ வியாபாரம் செய்பவர். பிணக்கூராய்வில் குழந்தை வன்புணர்வு செய்து கொல்லப்பட்டது உறுதியானது. ராஜா தவிர வேறு சிலரும் பின்னணியில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய வேண்டும் என ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
 
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை வரவேற்கிறோம். அதேசமயம், முதல்வர் சொல்லும் நடவடிக்கையைத் தாண்டி, இதுபோல் கொடூர செயல்களுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி என அவரை நோக்கியே கேள்வி எழுப்புகிறோம். இப்படிக் குழந்தைகள் மட்டுமல்ல; சிறுமியரும் வன்புணர்வு செய்து கொல்லப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதை ஆகிவருவதையும் சுட்டிக்காட்டுகிறோம். 

கடந்த மார்ச் 21ந் தேதி, சென்னை மதுரவாயல் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் 10 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் ராஜஸ்தான் மாநில குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி அவர். இரவு 11 மணியளவில் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற அந்தச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் வன்புணர்வு செய்துவிட்டு, 3ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார். எங்கு தேடியும் விசாரித்தும் கிடைக்காது, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க, போலீசார் வந்து, வீட்டுக்குப் பின்புறமுள்ள காலி இடத்தில் சிறுமி மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்த நிலையில் கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதில், சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷ் கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. 

கடந்த மார்ச் 25ந் தேதி கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் 6 வயது சிறுமி வன்புணர்வுக் கொலை. பிணக்கூராய்வில் இது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 2019 மார்ச் 25ந் தேதி மாலை சுமார் 6 மணிக்கு, கோவை துடியலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. எங்கு தேடியும் கிடைக்காமல், மறுநாள் அதிகாலையில் வீட்டருகே முகத்தில் டிஷர்ட் சுற்றப்பட்டு சடலமாகக் கிடந்தது. வன்புணர்வு செய்தே கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. பக்கத்து வீட்டு சந்தோஷ்குமார் என்பவரே இதைச் செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. வழக்கில் சந்தோஷ்குமாருக்கு துாக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது கோவை மகளிர் நீதிமன்றம். டிஎன்ஏ அறிக்கையின்படி இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரைப் பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஒருசில அண்மைச் சம்பவங்கள்தான் மேலே குறிப்பிட்ட அனைத்தும். அதற்கு முந்தைய ஓர் 5 ஆண்டு கால வன்புணர்வுக் கொலைப் பட்டியல் என்றால் அதில் பல நூறு நிகழ்வுகள் இடம்பெறக்கூடும். 

இப்படிக் குழந்தை வன்புணர்வுக் கொலைகள் தவிர, பச்சைக் குழந்தைகள் விற்பனையும் கூட கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் தலைமையிலான ஒரு கும்பல், குழந்தைப் பேறில்லாத தம்பதியரிடம் பச்சைக் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவந்துள்ளது. இதில் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், வாகன ஓட்டுனர் முருகேசன் உள்ளிட்டோரைக் கைது செய்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகம் செல்லரித்த ஒரு சமூகமாக மாறிவிட்டதோ என்ற அச்ச உணர்வே மேலிடுகிறது. அதனால் அரசும் காவல்துறையும் கூடுதல் விழிப்புடன் செயலாற்ற வேண்டியுள்ளது. ஏழு வயது ஜெயப்பிரியா உள்ளிட்ட வன்புணர்வுக் கொலைகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி,  இத்தகைய தொடர் நிகழ்வுகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி எனக் கேள்வியும் எழுப்புகிறது’’ என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

click me!