அந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. முன்னெச்சரிக்கை தேவை... முத்தரசன் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Apr 20, 2021, 9:01 PM IST
Highlights

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் கட்டமாகத் தீவிரமாகப் பரவும் சூழலில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நாடு முழுவதும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் வேளையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் ஆக்சிஜன் தடைப்பட்டதால் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் இருப்புநிலை, தேவை குறித்து ஏன் ஆய்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ள அரசு, தடுப்பூசி போடுவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குவது, ஊட்டச்சத்து உணவு தானியங்கள் இலவசமாக வழங்குவது, ரொக்கப் பண வசதி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளையும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

click me!