
கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை ஒபிஎஸ் அணியினர் புறக்கணித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த வண்ணம் உள்ளது.
இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தா சலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஆனால் எம்.சி.சம்பத் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாமல் அவருக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவை பன்னீர்செல்வம் அணியினர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.