கொரோனா காலத்தில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொடூரமாக கொலை.! பதறும் வீட்டு உரிமையாளர்கள்.!

By T BalamurukanFirst Published Jul 10, 2020, 8:13 AM IST
Highlights

4 மாத வீட்டு வாடகையை கேட்டதால் வீட்டின் உரிமையாளரை குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

ஊரடங்கு காலத்தில் வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக அரசும், ஐகோர்ட்டும் தெரிவித்து இருந்த நிலையில் 4 மாத வீட்டு வாடகையை கேட்டதால் வீட்டின் உரிமையாளரை குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருக்கு மாலதி என்ற மனைவியும், வசந்தகுமார், கேசவன் என 2 மகன்களும் உண்டு. இவர் இரண்டு மாடி வீட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

தற்போது மகன்களின் படிப்பு சம்பந்தமாக மனைவி மற்றும் மகன்கள் அயனாவரத்தில் உள்ளனர். குணசேகரன் மட்டும் இந்த வீட்டில் தனியாக தங்கி இருந்தார். வாடகைக்கு விட்டுள்ள வீட்டில்  அஜித்  என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாததால் கடந்த 4 மாதங்களாக அஜித் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றும், இதனால் சில தினங்களுக்கு முன்பு அவர்களது வீட்டின் மின் இணைப்பை குணசேகரன் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

 அஜித்தின் பெற்றோரிடம் குணசேகரன் 4 மாத வீட்டு வாடகையை தரும்படி கேட்டதாக சொல்லப்படுகிறது.. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த அஜித்திடம் இதுபற்றி அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும் உடனே அஜித், குணசேகரனிடம் இதுபற்றி தட்டிக்கேட்டபோது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது குணசேகரன், அஜித்தை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசேகரனை குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன், உயிருக்கு பயந்து கத்திக்குத்து காயத்துடன் அங்கிருந்து தெருவில் தப்பி ஓடியிருக்கிறார். ஆனால் அஜித், விடாமல் விரட்டிச்சென்று ஓட, ஓட விரட்டி குணசேகரனை சரமாரியாக கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாலையில் தர, தரவென இழுத்து வந்து அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கொலை செய்த அஜீத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

click me!