
சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்த விவாகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது அக்டோபர் 12 ஆம் தேதிவரை நடவடிக்கை எடுக்க கூடாது என சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.
ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதைதொடர்ந்து சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.
மேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்பினார்.
இதையடுத்து உயர்மட்ட குழு விசாரணை பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வீடியோக்களை ஆய்வு செய்த உரிமை குழு ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
தங்கள் மீதான நடவடிக்கைக்கு தடை கோரி 21 உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 21 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.