கொரோனாவிலும் கொடூர அரசியல்... அதிமுகவினரின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் அடங்காத தி.மு.க..!

By Thiraviaraj RMFirst Published May 19, 2020, 4:58 PM IST
Highlights

, திமுக, மாற்று கட்சியில் உள்ளவர்களை குறிவைத்து, அவர்களுக்கு மட்டுமே உதவி செய்து தங்கள் கட்சியில் இணைக்கும் அஜெண்டாவை கையில் எடுத்துள்ளதாக பல பகுதிகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

ஆட்டைகடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாகி வருகிறது கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் திமுகவின் நிலைப்பாடு. கொரோனா படுத்தும் பாட்டால் மக்கள் உயிருக்கு அஞ்சி வரும் வேளையில், அதனை பயன்படுத்தி திமுக நிவாரணம் வழங்குவதாக பாசாங்கு செய்து பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் கொடூர அரசியல் யுக்தியை கையெலெடுத்து இருக்கிறது. 

கொரோனாவால் பலரும் வாழ்வாதாரம் முடங்கி தவித்து வருகின்றனர். தமிழக அரசும், தன்னார்வல அமைப்புகளும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். அதேவேளை திமுக இதனை பயன்படுத்தி கொடூர அரசியல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒன்றிணைவோம் வா என்கிற அமைப்பை தொடங்கி உதவி செய்யப்போகிறோம் என திட்டத்தை அறிவித்தது. ஆனால், ’ஒன்றிணைவோம் வா’அமைப்பிற்கு உதவி கேட்டு வந்த அழைப்புகளை முறையாக செவி கொடுத்து கேட்காமல் மக்கள் அலட்சியம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த அமைப்பால் வெகு சிலரே சிறிய அளவிலான உதவிகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இது ஒருபுறமிருக்க, கஷ்டப்படும் மக்களுக்கு பாகுபாடு காட்டாமல் உதவி செய்து வருவ்பவர்களுக்கு மத்தியில், திமுக, மாற்று கட்சியில் உள்ளவர்களை குறிவைத்து, அவர்களுக்கு மட்டுமே உதவி செய்து தங்கள் கட்சியில் இணைக்கும் அஜெண்டாவை கையில் எடுத்துள்ளதாக பல பகுதிகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எரிகிற நெருப்பில் கொள்ளிக்கட்டையை செருகுவதை போல அக்கட்சி நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், திமுகவில் சில அதிமுக தொண்டர்களை இணைத்துள்ளனர். ‘’எந்த நிவாரணமும் இன்றி தவித்த காஙேயத்தை சேர்ந்த 85 அதிமுகவினர் திமுக செய்த தொடர் நிவாரண பணிகளால் பயன்பெற்று மனம் நெகிழ்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் அமைச்சர் சாமி நாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக’’அக்கட்சியினர் பெருமையாக தகவல்களை வெளியிட்டனர். அடுத்து அதிமுக-வை சேர்ந்த அம்மா பேரவை செயலாளர் காட்டுக்காநல்லூரை சேர்ந்த விஸ்வநாதனின் மனைவி உணவுக்காக பொதுமக்களின் உதவி எண்ணை நாடினார். "ஒன்றிணைவோம் வா" முன்னெடுப்பின் மூலம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், ஆரணி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.வெள்ளை கணேசன் அரிசி, காய்கறி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அக்குடும்பத்திற்கு வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். 

click me!