இன்று மக்கள் மய்யம் கட்சியியின் தலைவர் கமலஹாசன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது எனக்கு மக்கள் பிரச்சனை தான் முக்கியம். காவிரி பிரச்சனை தொடர்பாக இரண்டு மாநிலங்களும் கலந்து பேசி, நல்ல முடிவை எடுக்க வேண்டும். என கூறியிருக்கிறார் கமல். இதனை குமாரசாமியும் ஒத்துக்கொண்டிருகிறார்.
ஆனால் இதே குமாரசாமி தான் தேர்தலின் போது தமிழ்நாட்டு மக்களுக்கு, ஒரு சொட்டு நீர் கூட கிடைக்க விடமாட்டேன் என வீராவேசமாக பேசியவர் . இப்போது இவருக்கும் கமலுக்கும் நடந்த சந்திப்பின் போது, அப்படியே உல்டாவாக இவர் பேசியிருப்பதிலும் ஒரு காரணம் இருக்கிறது என, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து, மத்திய அரசு காலம் கடந்தே அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. நிரந்தர தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில், ஆணையம் உரிய காலத்தில் அமைப்பதில், மத்திய நீர்வள ஆணையம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கூறிய குமாரசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கமல் சந்திப்பிற்கு பின் குமாரசாமியும், பேச்சுவார்த்தை என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது நீதிமன்ற தீர்ப்பை முடக்கும் உள் நோக்கோடு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு முடிவு .
சட்டப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கமலின் இந்த சந்திப்பால் 40 ஆண்டு காலம் போராடி பெற்ற சட்ட அங்கீகாரம், இப்போது பறிபோகும் சூழல் உருவாகி இருக்கிறது.
குமாரசாமி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மறுப்பாரேயானால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்து தான், இதுவரை மவுனம் காத்து வந்தார். அவரை இப்போது கமல் சந்தித்து பேச்சுவார்த்தை என்ற பெயரில், காலம் கடத்த குமாரசாமிக்கு மேலும் வாய்ப்பளித்திருக்கிறார்
கமல் இந்த பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண விரும்பினால் குடியரசு தலைவரை உடனே சந்தித்து, வி.பி சிங் மீது புகார் மனு அளிப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நீர் வள ஆணையம் ஏற்று, உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும். என வலியுறுத்த வேண்டும்.
எனவே தமிழக அரசு சட்ட வழிமுறையை பின்பற்றி, மேலாண்மை ஆணையம் அமைத்து, ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை மேற்க்கொள்ளலாம் என எதிர் பார்த்து, விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், கமல்ஹாசனின் இந்த துரோக சுயநலநடவடிக்கை மன்னிக்க முடியாத செயல் என எச்சரிக்கிறேன். என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர், பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.