நல்ல ஆன்மிகவாதி அமைச்சர் சேகர்பாபுவை தவறாக வழி நடத்துகிறார்கள்... வேதனைப்படும் ஹெச்.ராஜா..!

Published : Jun 21, 2021, 09:11 PM ISTUpdated : Jun 21, 2021, 09:12 PM IST
நல்ல ஆன்மிகவாதி அமைச்சர் சேகர்பாபுவை தவறாக வழி நடத்துகிறார்கள்... வேதனைப்படும் ஹெச்.ராஜா..!

சுருக்கம்

ஆன்மிகவாதியான அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை அதிகாரிகள் தவறாக வழிநடத்துவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மிகவும் நல்ல ஆன்மிகவாதி. ஆனால், அவரை அறநிலையத் துறை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் தவறான தகவல்களை அமைச்சரிடம் அளித்து வருகிறார்கள். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு வெறும் 9.58 ஏக்கர் நிலத்தை மட்டும் மீட்டுவிட்டு முழுவதும் மீட்டதுபோல் கூறுகின்றனர். 
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நான் ஆவணங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயில் நிலங்களை மீட்க நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை அமல்படுத்தினாலே போதுமானது. முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி நடத்திவரும் கலைஞர் கல்லூரி வளாகத்திலேயே கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தையும் அமைச்சர் மீட்க வேண்டும்.
கடந்த 56 ஆண்டுகளாக இந்து கோயில்களை அழிக்கும் பணியைதான் தமிழக ஆட்சியாளர்கள் செய்து வந்திருக்கிறார்கள். மிக அநாகரிகமான நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக தமிழக நிதி அமைச்சராகி உள்ளார். படிப்பு, பாரம்பரியம் என அவர் தற்பெருமை பேசாமல், தமிழகத்தின் நிதியைச் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நிதி அமைச்சரை முதல்வர் கண்டிக்க வேண்டும்.


தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிடுவதை கர்நாடக அரசு ஒருபோதும் தடுக்க முடியாது. காவிரி நதிநீர் பங்கீட்டில் துரோகம் செய்ததெல்லாம் திமுக அரசுதான். மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்ற ஆளுநர் உரையை நான் வரவேற்கிறேன். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினால், தமிழக அரசை ஊராட்சிகளின் அரசு என்றா கூற முடியும். நீதிமன்றம் தீர்ப்பு மூலம் நீட் தேர்வு வந்துள்ளதால், அதை மாற்ற முடியாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்த கூடாது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைத்திருக்கிறது. அரசியலுக்காக மத்திய அரசை எதிர்ப்பது திமுகவின் டிஎன்ஏவிலேயே உள்ளது. மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!