சாதி மாறி காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்... மீட்டுத் தரக்கோரி ’நாடகக் காதல் புரோக்கர்கள்’தொடர் போராட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 1:41 PM IST
Highlights

நாடகக் காதல் என்ற பெயரில் எங்கள் பிள்ளையை ஆசை வார்த்தை கூறி நயவஞ்சகமாக கூட்டிப்போய் மூளைசலவை செய்து போலி திருமணம் செய்து வாழ்க்கை சீரழிவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வோம்..? 

சேலம் மாவட்டம் கொளத்தூரில் காதல் திருமணம் செய்த மணமகன் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மணமகளை மீட்டுத் தரக்கோரி பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகம் நேவெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது விருப்பத்தின் படியும் கேட்டுக் கொண்டதன் பேரிலும் சுயமரியாதைத் திருமணம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில், கழகத் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஜாதியை காரணம் காட்டி பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததாலும், அச்சுறுத்தலில் ஈடுபட்டதாலும் கழகத் தோழர்களே திருமணம் செய்த மணமக்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனையறிந்த மணமகள் உறவினரான ஜாதி வெறிக்கும்பல் 40க்கும் மேற்பட்டோர்  சுமார் 10 மணியளவில் தோழர் காவை ஈசுவரன் வீட்டிற்குள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து அவரை கடுமையாகத் தாக்கி கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.

அதேபோல வேறு இடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருந்த மணமக்களையும் தேடிச் சென்று பலவந்தமாகக் கடத்திச் சென்று, மூவரையும் அடையாளம் தெரியாத பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். மூவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் இரவில் கடத்திச் சென்றிருப்பது தெரியவருகிறது.

மூவரும் கடத்தப்பட்ட தகவலறிந்து கழகத் தோழர்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். தோழர் காவை ஈஸ்வரன் மற்றும் மணமக்களை உடனடியாக மீ்ட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்ட ஜாதி வெறியர்களைக் கைது செய்ய வேண்டுமென கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கழகத் தோழர்கள் விடிய விடியப் போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியும் நள்ளிரவே காவல் நிலையம் விரைந்தார்.

இதன் விளைவாக திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் மற்றும் மணமகன் செல்வனை நள்ளிரவுக்குப்பின் போலீசார் மீட்டனர். இன்னமும் மணமகள் இளமதி ஜாதி வெறிக்கும்பலிடம் இருந்து மீட்கப்படவில்லை. இளமதியை மீட்கக்கோரி கொளத்தூர் காவல் நிலையத்தில் கழகத் தோழர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும், சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட வருகிறது.

உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம் ஆகியவை பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில் ஜாதி மறுப்பு திருமணத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையருக்கு அரசு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் இதற்கென ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

தமிழக அரசும் காவல்துறையும் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொடர்ந்து நீதிமன்றம் வழிகாட்டுதல்களை மீறியும், பாதுகாப்பு கேட்டு வரும் இணையர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடமையைச் செய்யத் தவறியும், உதாசீனப்படுத்தியும், அலைக்கழித்தும் சில இடங்களில் ஜாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவது ஜாதி ஆணவப்படுகொலைகளுக்கு துணைபோவது போலவேதான் ஆகும். ஆகவே நீதிமன்ற வழிகாட்டுதலின்களின்படியும், காவல்துறை ஜாதி மறுப்பு இணையர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை உறுதிப்படுத்தவும் இதற்கென தனிப் பிரிவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

ஆணவப் படுகொலை செய்யும் நோக்கத்தோடு மணமக்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களை அதிகளவில் நடத்தி வைப்பதால் திவிக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரனையும் கொலை செய்யும் நோக்கத்தோடும் கடத்திச் சென்ற ஜாதி வெறிக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு தக்க பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்டம் தொடரும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழக அரசே... செல்வனின் மனைவி இளமதியை உடனடியாக மீட்டுத் தர வேண்டும். ஜாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென் சென்னை மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமையில், சென்னை சிம்சன் பெரியார் சிலை அருகில் இன்று மாலை 4 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரின் உறவினர்கள், ‘’கஷ்டப்பட்டு ஈ, எறும்பு அண்டாமல், தேவையானதை வாங்கிக் கொடுத்து ஆசைகளை நிறைவேற்றி பெண் பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என 23 ஆண்டுகளாக பொத்திப்பொத்தி வளர்த்தோம். நாடகக் காதல் என்ற பெயரில் எங்கள் பிள்ளையை ஆசை வார்த்தை கூறி நயவஞ்சகமாக கூட்டிப்போய் மூளைசலவை செய்து போலி திருமணம் செய்து வாழ்க்கை சீரழிவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வோம்..? 

எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொடுப்பதில் எங்களுக்கு இல்லாத அக்கறை திராவிடர் விடுதலை கழக நாடக காதல் புரோக்கர்களுக்கு எங்கிருந்து வந்தது? பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை திட்டமிட்டே நாசமாக்க துணை போகும் இந்த அமைப்பினரை கைது செய்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும்’’என்கிறார்கள். 

click me!