நாங்கள் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே? செந்தில் பாலாஜியை திணறடித்த தங்கமணி..!

By Selva KathirFirst Published Jun 23, 2021, 9:01 AM IST
Highlights

மின்மிகை மாநிலம் என்பது சொந்த மாநிலத்திலே மின் உற்பத்தி செய்து அடைவது மட்டும் அல்ல, தேவையான மின்சாரத்தை பிற மாநிலத்தில் வாங்கி பயன்படுத்தப்பட்டதும் தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் தடைக்கு காரணம் என்ன என்று வினா எழுந்த போது குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பதில் அளிக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி அதற்கு கவுண்டர் கொடுக்க சட்டப்பேரவையில் விவாதம் அனல் பறந்தது.

ஆளுநர் உரையில்  பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் துணைக் கொறடாவுமான ரவி, கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்றாலே மின்தடை ஆட்சி என்ற நிலைதான் உள்ளது. மேலும் மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி உள்ளதாகவும் அவர்  குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம்  கொடுக்கப்பட்டது. அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை என்று  தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மின்தடைக்கு காரணம் கடந்த 9 மாதங்களாக எவ்விதமான பராமரிப்பு பணிகளும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளபடாதது தான் என்று செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க தான் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின்தடை இருக்கத்தான் செய்யும் என்றும அவர் தெரிவித்தார். பராமரிப்பு பணிகளால் ஏற்படகூடிய  மின் தடை 10 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார்.

அப்போது எழுந்த  எதிர்கட்சி துணைத்  தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு வந்த கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளமல் இந்த அரசு என்ன செய்தது என்றார். ஏன்என்றால் இந்த ஒரு மாதமாக தான் மின்தடை உள்ளது என்றும் அவர் புகார் கூறினார்.    அதிமுக ஆட்சியில் இப்போது போல மின் தடை இருந்தது இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மானியமாக இருந்தது என்று சொல்லிகொள்கிறார்கள். ஆனால் 1 லட்சத்து 36 ஆயிரம்  விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் காக்க வைத்திருந்தார்கள். இது தான் மின் மிகை மாநிலமா? என்று பதில் அளித்தார்.  

அப்போது எழுந்த சட்டமன்ற உறுப்பினரும் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சருமான தங்கமணி, நாங்கள் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையெ என்கிற ரீதியில் பேசினார். மரங்கள் வெட்டவில்லை பாராமரிப்பு இல்லை அதனால் மின்தடை என்பதை எப்படி ஏற்க முடியும் என்றும் தங்கமணி கேள்வி எழுப்பினார். மரங்கள் இல்லாத சென்னையில் மின்தடை ஏற்பட என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மின்மிகை மாநிலம் என்பது சொந்த மாநிலத்திலே மின் உற்பத்தி செய்து அடைவது மட்டும் அல்ல, தேவையான மின்சாரத்தை பிற மாநிலத்தில் வாங்கி பயன்படுத்தப்பட்டதும் தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் நீர்வளத்தறை அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு பேசி, முன்னாள் அமைச்சர்களுக்கு பதில் அளிக்க  நேரம் அளித்துக்கொண்டு இருந்தால் அவையை நடத்தமுடியாது. அதனால் இதோடு இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என்றார்.

click me!