உங்கள் அமைச்சரை அடக்கி வையுங்க.. இணக்கமா போங்க... முதலமைச்சர் ஸ்டாலினை எச்சரித்த எல். முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2021, 1:51 PM IST
Highlights

தமிழக நிதியமைச்சரோ " மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் என பொய் பரப்புரையாற்றுகிறார். மேலும் மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்கிறார். 

தமிழக நிதி அமைச்சர் தொடர்ந்து  சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் எனவும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறியது போல் மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து, மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவாருங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே என  தமிழக பாஜக மாநில தலைவர் திரு எல் முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு: 

"மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்தால்தான் மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவரமுடியும்" என பகிரங்கமாக சொன்னவர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி.  எப்பொழுதெல்லாம் ஆளும்கட்சியாக திமுக இருக்குமோ அப்பொழுதெல்லாம் இதை சொல்வது அவரின் வழக்கம் ஆக கருணாநிதியினையும் அவரின் போதனைகளையும் இப்பொழுதுள்ள திமுகவோ அதன் நிதி அமைச்சரோ சுத்தமாக மறந்தே விட்டனர் என்பது தெரிகின்றது.  "முதல் அலைக்கு முழுவதும் முற்றுப்புள்ளி வைக்கத்தவறியதால்தான் 2வது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாக போயிற்று -என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் "தடுப்பூசி குறித்து நீங்களும், உங்களின் கூட்டணி கட்சிகளும் செய்த விமர்சனங்களால் தான் முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் 2வது அலை  தொடர்ந்தது. 

ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக  செயல்பட்டிர்களா என மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் அவர் நெஞ்சைத் தொட்டு சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு நேற்றைய தினம் அவசரமாக 4 லட்சத்து 20 ஆயிரத்து ஐநூற்று எழுபது கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அத்துடன் 75000 கோவேக்ஸின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளது. எந்த காரணம் கொண்டும் தடுப்பூசி போடுவதில் தொய்வு ஏற்படக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது. மக்களின் உயிர் காப்பதில் மத்தியில் ஆளும் அரசுக்கு இருக்கும் அக்கறை. மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தடுப்பு மருந்துகள் (டோஸ்) உபயோகத்துக்கு வரும்" -என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வந்தால், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 லட்சம் டோஸ் ஊசி போடலாம். மே மாதம் 8 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு வந்தது. இதை விட ஜூனில் 4 கோடி அதிகம் (50% அதிகம்) கிடைக்கும். 

ஜூலையில் அனேகமாக 20 கோடி வரலாம். ஆகஸ்ட் - டிசம்பரில் 220 கோடி! இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள்ளேயே தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் உறுதி செய்துள்ளார். அனேகமாக, ஜூலை - ஆகஸ்ட்டில், இப்போதைய 45+ மட்டுமல்லாமல்,  18 வயதுக்கு மேற்பட்டவர்களும் மத்திய அரசின் 'இலவச' திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசிய திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி ஆர் பாலு அவர்கள் மத்தியில் ஆளும் மோடி அரசானது எங்கள் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக நிறைவேற்றுகிறது என கூறினார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமனியம் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். 

தமிழக நிதியமைச்சரோ " மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் என பொய் பரப்புரையாற்றுகிறார். மேலும் மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்கிறார். மத்திய அரசு என்பது வேண்டியவர் வேண்டாதவர் என அரசியல் செய்வதாக சிறுபிள்ளை தனமாக பேசுகிறார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறியது போல் மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவாருங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே. உங்கள் அமைச்சர்களுக்கு மத்திய  மாநில அரசுகளிடையே நல் உறவு இருப்பின் மட்டுமே மக்கள் நலன் காக்க முடியும் என அறிவுறுத்துங்கள். இந்த இக்கட்டான சூழலில் மக்களை காக்க தேவையான செயல்பாடுகள் தான் முக்கியம் என உணர்த்துங்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என்று எடுத்துரையுங்கள் உங்கள் சக அமைச்சர்களுக்கு. மக்கள் நலன் ஒன்றையே கவனத்தில் கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத்து.  

 

click me!