பச்சைப்பொய்யாக்கிய இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... உற்சாகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

Published : Jan 05, 2021, 10:35 AM IST
பச்சைப்பொய்யாக்கிய இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்... உற்சாகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

சுருக்கம்

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாசமுத்திரம், எம்.எல்.ஏ., முருகையாபாண்டியன் வீட்டிற்கும் இருவரும் ஒரே காரில் சென்று நலம் விசாரித்தனர்.

சிறகடித்துப் பறந்த வதந்திகளை தூள்தூளாக்கிவிட்டனர் முதல்வர் இபிஎஸ்-சும், துணை முதல்வர் ஓபிஎஸ்-சும். இந்த காட்சியைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும் அதிமுகவினர், ’’அம்மா சொன்னது போல இனி நூறு ஆண்டுகளுக்கு அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது’’ என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

’அதிமுகவில் முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் பன்னீருக்கும் இடையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பன்னீர் அதிமுகவிலிருந்து விலக இருக்கிறார்’ என கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. அதிமுக மீது நாள்தவறாமல் அவதூறுகளை அள்ளியிறைக்கும் திமுக தலைவர் ஸ்டாலினும் இதையே சொல்லி வந்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பம் நிலவியது.

இந்தநிலையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரியில் நேற்று நடைபெற்ற பி.ஹெச் பாண்டியன் மணிமண்டப திறப்பு விழா, இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்தது. இந்த விழாவில் பங்கேற்க இபிஎஸ்-சும், ஒபிஎஸ்-சும் சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடி சென்றனர். பின்னர் இருவரும் ஒரே காரில் சேரன்மகாதேவிக்கு பயணம் மேற்கொண்டனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த காட்சியைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.

நெல்லை கருங்குளத்தில், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, இருவரும் ஒரே ஜீப்பில் சிறிது துாரம் பயணித்து, வரவேற்பை ஏற்றுக் கொண்டனர். அப்போது கூட்டத்தினர் எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் விண்ணதிரச் செய்தன.பின்னர் அங்கிருந்து இருவரும் ஒரே காரில் நிகழ்ச்சி நடந்த கோவிந்தபேரி சென்றனர். தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாசமுத்திரம், எம்.எல்.ஏ., முருகையாபாண்டியன் வீட்டிற்கும் இருவரும் ஒரே காரில் சென்று நலம் விசாரித்தனர்.

இபிஎஸ், ஒபிஎஸ் இடையே நிலவும் இந்த நல்லுறவு அதிமுகவினரை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதுபற்றி அவர்கள் கூறும்போது,’’  அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் அனாதைகளாக மாறிவிட்டதாக எண்ணினோம். ஆனால் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகிய இருபெரும் தலைவர்களால் அந்த எண்ணம் அடியோடு மாறிவிட்டது. ஆனாலும் இவர்களுக்கு இடையே  உறவு சரியில்லை என செய்திகள் வெளியானபோது ரொம்பவே சங்கடப்பட்டோம். ஆனால் அது பச்சைப் பொய் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. மருது சகோதரர்கள் போல இருவரும் ஒன்றாக வலம் வந்த காட்சி எங்களுக்கு யானை பலத்தைத் தந்திருக்கிறது. தொண்டர்களின் உற்சாகத்தை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். இந்த ஒற்றுமையும், உற்சாகமும் தொடரும் பட்சத்தில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’’ என்றனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!