Tasmac close: 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்... வந்தது அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jan 7, 2022, 11:46 AM IST
Highlights

இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10  மணியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தின் போது, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை அடுத்து வருவாயை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும், நடப்பு ஜனவரி மாதத்தில் 15, 18, 26 ஆகிய மூன்று தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த மூன்று நாட்களில் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுபான விற்பனையில்லா தினங்களாக இந்த நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன என்பதால் இந்த மூன்று நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அன்றைய தினமும் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தன்று ஒட்டு மொத்தமாக 147 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. சென்னை மண்டலத்தில் 41.45 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 26.52 கோடி ரூபாய்க்கும் என மதுபானம் விற்பனையானது.

click me!