கொடுத்த வாக்கை காப்பாற்றாத அண்ணாமலை பல்கலை கழகம்...!! 3600 பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எம்எல்ஏ..!!

By Ezhilarasan BabuFirst Published May 21, 2020, 6:46 PM IST
Highlights

ஆனால், 2017-ஆம் ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட 3600 பணியாளர்களில் 2040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. 

பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலை கழகத்தில்  பணியமர்த்த வேண்டும் என மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அவர் ,  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. நிதி நெருக்கடி காரணமாக ,2017-ஆம் ஆண்டு  ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சி மற்றும் டி பிரிவுகளைச் சேர்ந்த 3600 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றி பணியமர்த்தப்பட்டனர். 

இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், சி மற்றும் டி பணியாளர்கள் பிற அரசுத் துறைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும், அதன்பின் அவர்கள் அந்த துறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஆனால், 2017-ஆம் ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட 3600 பணியாளர்களில் 2040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது.அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முயற்சியிலும்  ஈடுபட்டுள்ளது. 

இது முற்றிலும் நியாயமற்ற செயலாகும். ஏற்கனவே இப்பிரச்சனை காரணமாக அவர்கள் பல இழப்புகளை சந்தித்துள்ளனர்.எனவே  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பின்னர் 3 ஆண்டுகள் பணி நிரவல்  காலத்தில் பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றி முடித்த 2040 சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும். பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவிஉயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!