கருணாநிதி பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை பண்ணுங்க.. மு.க.ஸ்டாலினை கேட்கும் தமிமுன் அன்சாரி.!

By Asianet TamilFirst Published May 31, 2021, 8:52 AM IST
Highlights

சிறையில் 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்களை, கருணாநிதி பிறந்த நாளையொட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
 

தமிழகத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட காலம் தண்டனையை அனுபவித்திருந்தால், அவர்களை தலைவர்களுடைய பிறந்த நாளில் விடுதலை செய்வது பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன. கடைசியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாள், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. புதிதாக முதல்வராக பொறுப்பேற்று, அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற ஜூன் 3-ஆம் தேதி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆட்சிக்கு அது மேலும் சிறப்பு சேர்க்கும்.
சிறை தண்டனையின் நோக்கமே ஒருவரை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் வாழச் செய்வதே ஆகும். அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் எஞ்சிய கால வாழ்வில் வசந்தம் ஏற்படவும், அவர்களது குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படவும் முதல்வர் ஸ்டாலின், கருணை உள்ளத்தோடு நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.” என்று அறிக்கையில் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

click me!