அயல்நாட்டில் ஆதரவின்றி தவிக்கும் தமிழர்கள்! ஆதரவு கரம் நீட்டுமா மத்திய அரசு!

First Published Dec 1, 2017, 12:38 PM IST
Highlights
Tamils who do not get support in foreign countries


செனகல் நாட்டில் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 23 பேரை மீட்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்ராம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டுக்கு சென்றனர். மின்சாரம் நிறுவனம் ஒன்றில் அவர்கள் பணிக்கு சேர்ந்தனர். பணியில் சேர்ந்த இவர்களுக்கு முதல் மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் இவர்களுக்கு சம்பளம் எதுவும் தரப்படவில்லை. இதனால் அவர்கள் உணவு, உடை என
அத்தியாவசிய தேவைகளுக்கே போராடும் நிலை ஏற்பட்டது.

சம்பளம் தராத நிலையில், அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப முயற்சித்தனர். ஆனால், அதனை அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, கடந்த 23 ஆம் தேதி, இவர்கள் செனகல் நாட்டில் உள்ள இந்திய தூதரையும் சந்தித்துப் பேசினர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட நிறுவனம், ஊதியம் தர ஒத்துக் கொண்டது. ஆனாலும், அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க மறுத்து விட்டது. தாங்கள் கொத்தடிமைகளாக
வேலை செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பாக, இவர்கள் வேலூர் ஆட்சியருக்கு, தங்களைக் காப்பாறுமாறு வாட்ஸ்அப் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த செய்தியை அறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எப்போது இவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர் எதிர்பார்த்து உள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், 23 தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சூழல் கொடூரமானது என்று கூறியுள்ளார். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்பற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 23 தொழிலாளர்களை மீட்கும் விஷயத்தில் செனகல் நாட்டுக்கான
இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், அவர்களை மீட்டு, தாயகம் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் கலையளிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

செனகல் நாட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 23 பேரையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு செனகல் நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும். அவர்கள் சொந்தமாக சிறுதொழில் தொடங்க தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!