பத்தாம் வகுப்பு வினாத்தாள்களில் மாற்றம் வேண்டும்.! மாணவர்கள் தரம் உயர்த்த அரசுக்கு ஆசிரியர்கள் சொன்ன அட்வைஸ்

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2020, 2:11 PM IST
Highlights

 இம்முறையில் வினாத்தாள் அமையும் போது மாணவர்களின் ஒழுக்கம் சமூகம் சார்ந்தபார்வைகள் மேம்படும் . படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும். 

நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம்  வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :-  10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றியமைத்தது இந்திய அளவில் தரமானகல்விக்கு உத்திரவாதம் அளித்துள்ளது  என்றால் அது மிகையாகாது . ஆனால் கேள்விமுறை பழைய முறையில் ஒரு மதிப்பெண் ,இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிப்பது அதேபோன்றே ஐந்தாண்டுகள் வரை நீட்டிப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும். டி. ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்டப்  போட்டித்தேர்வுகள் போன்று வினாக்கள் அமைத்திடவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கின்றபோதே போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.

 

மாணவர்கள் எளிதாகவும் ஆர்வத்துடனும் படிக்கமுடியும். தேர்வு எப்போது முடியும் என்று எதிர் பார்ப்பதை விட எப்போது தொடங்கும் என்ற ஆவலைத் தூண்டிட வேண்டும். தற்போது புதிய பாடத்திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டார்கள்.  இன்னும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தோர்வுக்காக காத்திருக்கின்றனர்,  தற்போது கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக எப்போது தேர்வு என்பது நிலைத்தத் தன்மை இல்லாதது போன்ற குழப்பங்களில் மாணவர்கள் தேர்வை சந்திக்க தயாராவது என்பதும்,  உளவியல் ரீதியாக மனதை தயார்படுத்துவதும்   அவ்வளவு சுலபமல்ல. அதே நேரத்தில் மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடாமல் இருப்பதிலும் கவனத்தில் கொள்ள வேண்டும். 10 ஆம் வகுப்பு வினாத்தாள் மாற்றியமைக்கப்படும் போது அது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துகாட்டாக 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள்கள்  தயாரிக்கும் போது 60 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் (சரியானவிடை தேர்வு) வினாக்களும் OMR தாள் மூலமாக தயாரிக்க வேண்டும். 

 

30 மதிப்பெண்கள் 5 மதிப்பெண் வினாக்கள் எழுத்து முறை .  மீதமுள்ள  10 மதிப்பெண் மாணவனின் மதிப்பீடு முறையில் ஒழுக்கம் ஈடுபாடு , பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , பொது சுகாதாரம் உள்ளிட்டவை அடிப்படையில் அமைந்திடவேண்டும். இம்முறையில் வினாத்தாள் அமையும் போது மாணவர்களின் ஒழுக்கம் சமூகம் சார்ந்தபார்வைகள் மேம்படும் . படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும். மேலும் வினாத்தாள் திருத்துவதும் ஆன்லைன் மூலம் திருத்துவதன் காலம் விரையம் ஆகாது. குறிப்பாக வெளிப்படைத் தன்மையும் நம்பகத்தன்மையும் கூடும். இது சாதாரண சூழல் மட்டுமின்றி அசாதாரண சூழலுக்கும் ஏற்றதாக அமையும். வினாத்தாள் முறை மாற்றம் மூலம் மாணவர்கள் படிப்பினை உறுதிசெய்வதோடு பள்ளிக்கு வரும் எண்ணம் அதிகரிக்கும். இடைநிற்றல் குறையாது. கல்வியும்  நம்பிக்கை ஊட்டுவதாக அமையும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை  பரிசீலனைசெய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!