இப்படியே போனா பள்ளிக்கூடங்கள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும்...!! பதறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2020, 2:13 PM IST
Highlights

இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்படுகிறது. 

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு முப்பருவப் பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்பதை தவிர்க்கவேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டம் திருத்தம் 2019 ன்படி தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுக்கல்வி வாரியத்தலைவருமான பள்ளிக்கல்வி  இயக்குநரின் கடித அடிப்படையில் இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்படுகிறது.  ஆடல் ,  பாடல் முறை விளையாட்டுமுறை கல்வி, கதைவழி  முறை கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும்.  பள்ளிக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள். வீட்டுச்சூழல் போன்று பள்ளிச்சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள்.

 
  

கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் இஷ்டம் வரும் என்றால் கல்வியினை கல்வியாக பார்க்காமல் கல்விச்சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசு பள்ளிகள் , மாநகராட்சிப்பள்ளிகள் அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டங்கள் நடுவில் அழைத்துவருகிறோம். இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுப்பாய்ச்சும்.  ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதை எடுத்துரைத்து வலியுறுத்தியதின் பேரில் படிக்கின்றப்பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்றார்கள். 

கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தைப் பாதிக்கின்ற வகையில் தற்போது முப்பருவப் பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் தயார் செய்து வெளியிட்டிருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், குழந்தைகளின் நலன்கருதி மாண்புமிகு.கல்வி அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்றாம் பருவப் பாடத்திலிருந்து வினாக்கள் அமைத்திட வேண்டுகின்றோம். மாணவர்களின் நலன்கருதி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முப்பருவத்தேர்வு முறையினை அறிமுகப்படுத்தினார். தற்போது 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை அறிவித்தது மட்டுமின்றி முடிந்துப்போன பாடத்திலிருந்து அதாவது முப்பருவப்பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்பது மாணவர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் இரண்டு பருவங்களின் தேர்வுகள் முடிந்து புத்தகத்தையே மறந்திருப்பார்கள்.  மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதை மறுபரிசீலனை செய்திடவேண்டும்.  மூன்றாவது பருவத்திலிருந்து வினாக்கள் எடுத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!