4000 திருமணம் நடத்தி வைத்தவருக்கு இப்படி ஒரு முடிவா..? உருகிய முதலமைச்சர் ஸ்டாலின்..

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 4:16 PM IST
Highlights

இலக்கண செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை, அதன் பண்பாட்டை, தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்துவதற்காக தனது 94 ஆவது அகவையில் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார் அவர்கள்

தமிழையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான ஐயா இளங்குமரனார் அவர்களின் மறைவு தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் உருக்கமாக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:  

இலக்கண செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை, அதன் பண்பாட்டை, தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்துவதற்காக தனது 94 ஆவது அகவையில் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார் அவர்கள். தமிழ் மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன் வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். 2000 த்தின் தொடக்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில் ஐயா இளங்குமரனார் அவர்கள் பங்கேற்று உரையாற்றிய தனிச்சிறப்பாகும். 

வடமொழி, பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன் சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை, திருக்குறள் ஓதியும், தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் ஐயா இளங்குமரனார். அடுத்தடுத்து தலைமுறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர், பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலம் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைபிடித்து, நல்வாழ்வு வாழ்ந்து, அவற்றில் இன்றைய  இளைஞர்களும் பின்பற்றும் வழிகளை கற்றுத் தந்தவர். 

இளங்குமரனார் அவர்களின் உடை போலவே அவரது உள்ளம் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ் பணி போற்றுதலுக்குரியது, ஐயா இளங்குமரனார் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் ஐயா இளங்குமரனார் இன் இறவாப் புகழ் என தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

click me!