திமுக தலித்துகளுக்கு எதிரான கட்சி..!! தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும்... களத்தில் இறங்கிய தமிழக பாஜக..!!

By Ezhilarasan BabuFirst Published May 15, 2020, 12:07 PM IST
Highlights

தி.மு.க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.தங்களை மரியாதை இல்லாது பேசுவதற்கு தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்றும், பட்டியலின சமுதாயம் மூன்றாந்தர குடிமக்கள் தான் என்ற வன்மத்தோடு, சாதிய சிந்தனையோடு தான் தயாநிதி மாறன் பேசியுள்ளார் என்பதை அவரது பேச்சு தெளிவாக உணர்த்துகிறது.

மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது "நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?" என்று கூறி பட்டியலின மக்களை அவமானப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தலைமை செயலாளர் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக புலம்பும் அவர்களுக்கு, உரிய விளக்கத்தை தலைமை செயலாளர் அவர்கள் அளித்துள்ள  நிலையில், தயாநிதி மாறன் அவர்களின் பேச்சு  ஒட்டு மொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தியுள்ளது, தலைகுனிய வைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருப்பது சட்டப்படி  குற்றம்.

 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்காகவும் தான் வன்கொடுமை சட்டம் இயற்றப்பட்டது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பிப்ரவரி 18, 2017 ம் ஆண்டு தமிழக சட்டசபை சபாநாயகர் திரு. தனபால் அவர்களை  தி.மு.க உறுப்பினர்கள், அவரது இருக்கையில் இருந்து அகற்றியதும், அவரை வசைபாடியதும், அவரின் இருக்கையில் ஏறி அமர்ந்து அவரின் சட்டையை கிழித்து அவமானப்படுத்தியதையும், அவரின் கொடும்பாவியை கொளுத்தியதையும் தமிழகம் மறந்து விடவில்லை. தான் ஒரு தலித் என்பதால் தான் தி.மு.க தன்னை குறிவைத்து தாக்கியது என்று அவர் கூறியதையும்,  தமிழக மக்கள் மறக்கவில்லை. இவை அத்துணையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையிலேயே அரங்கேறியது என்பது தி.மு.க தலித்துகளுக்கு எதிரான இயக்கம் என்பதை உறுதி செய்கிறது.

அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று தி.மு.க வின் அமைப்பு செயலாளர்     திரு. ஆர் . எஸ்.பாரதி அவர்கள், கூட்டம் ஒன்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்துப் பேசிய போது "ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று கூறியது, தி.மு.க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.தங்களை மரியாதை இல்லாது பேசுவதற்கு தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்றும், பட்டியலின சமுதாயம் மூன்றாந்தர குடிமக்கள் தான் என்ற வன்மத்தோடு, சாதிய  சிந்தனையோடு தான் தயாநிதி மாறன் பேசியுள்ளார் என்பதை அவரது பேச்சு தெளிவாக உணர்த்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை  கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ள மக்களவை உறுப்பினர் திரு.தயாநிதி மாறன்  மீது

தமிழக காவல் துறை வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும்.தொடர்ந்து பட்டியலின மக்களின் மீது தாக்குதல்களையும், அவமானத்தையும் அள்ளி வீசும் தி.மு.க வினரை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாக மார்  தட்டி கொள்ளும் தி.மு.க, சமூக அநீதியை இழைத்து கொண்டிருக்கிறது.

 

click me!