தமிழக மக்களே உஷார், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 200, பொது இடத்தில் துப்பினால் ரூ 500 அபராதம்: அரசு எச்சரிக்கை

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2020, 9:54 AM IST
Highlights

பொது இடங்களில் குப்பைகளுடன் கலந்து முக கவசத்தை அப்புறப்படுத்த கூடாது எனவும், துணியால் ஆன முகக் கவசத்தை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்கு பிறகு நன்றாக துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். 

வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாவது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் படி தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவை மற்றும் பணி நிமித்தமாக வெளியே  வருகின்றனர். அவ்வாறு பொதுமக்கள் வெளியேறும் பொழுது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பல்வேறு செய்திகள், செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் முக கவசம் அணிவது குறித்து எடுத்துரைத்து அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இதுகுறித்து வணிக வளாகங்களில் இருந்து பொதுமக்களிடம் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவதுடன் அதை சரியான முறையில் அணிய வேண்டும் எனவும், வாய் மூக்கு ஆகிய பகுதிகளை முழுமையாக மூடும் வண்ணம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை,  காய்கறி சந்தை, வழிபாட்டு தலங்கள், பல்பொருள் அங்காடி மற்றும் துணிக்கடைகள் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிவதுடன் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் முக கவசத்தை தவறாக தாடைப் பகுதியிலோ அல்லது மூக்கிற்கு கீழோ அணியக் கூடாது எனவும், முக கவசத்தின் முன்பகுதியை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்ப்பது கட்டாயம் எனவும், பின்புறத்தின் வழியாக மட்டுமே அகற்ற வேண்டும் எனவும், 

பொது இடங்களில் குப்பைகளுடன் கலந்து முக கவசத்தை அப்புறப்படுத்த கூடாது எனவும், துணியால் ஆன முகக் கவசத்தை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்கு பிறகு நன்றாக துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும், முகக் கவசம் அகற்றப்பட்ட உடன் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி  ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் துப்பினால் ரூபாய் 500 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆலோசனைகளையும், அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல, தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை  காப்பாற்ற முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்ற நிலையில் அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை, அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 
 

click me!