
இரவில் திடீர் மின் வெட்டு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு ஏற்பட்டது. 2 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் வரை பல இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். மக்கள் செய்வதறியாது திணறினர். இது குறித்து டுவிட்டர் பதிவிட்ட மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் பாதிப்பு- ராமதாஸ்
இந்தநிலையில் நேற்று இரவு ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு நீடித்ததாக தெரிவித்துள்ளார். இனி இப்படி நிகழக்கூடாது என கேட்டுக்கொண்டவர், அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மாற்று திட்டத்திற்கு தயாராக வேண்டும்
மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடை பட்டது தான் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும்! தமிழ்நாடு மின்மிகை மாநிலமல்ல.... தற்சார்பு மாநிலமும் அல்ல. தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதியே எச்சரித்திருந்ததாகவும், . எனவே நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்