தமிழகமே தலையில் வைத்து கொண்டாடிய பெண் போலீசுக்கு சித்திரவதை .. அதிகாரிகள் டார்ச்சரால் விபரீதி முடிவு..

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2021, 6:16 PM IST
Highlights

அதேபோல ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணி சுமை காரணமாக மாதம் 24ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார், உயர் அதிகாரிகள் அவரை திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, 

நெல்லையில் காவல் ஆய்வாளர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர், ஏற்கனவே உயரதிகாரிகளின் நெருக்குதல் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது ஆய்வாளரும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது காவல்துறையை கதிகலங்க வைத்துள்ளது.

காவல்துறை என்றாலே மிரட்டலும், முரட்டுத்தனமும் தான் நம் கண் முன் வரும், ஆனால் அப்படி துடிப்பான பணியில் சேரும் காவலர்கள்கூட நாளடைவில் பணிச்சுமை அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம், மாரடைப்பு, தற்கொலை என மோசமான முடிவுக்கு தள்ளப்படும் அவலம் உள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது என்றே சொல்லலாம்,  கடந்த 2011 ஆம் ஆண்டில் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் திருச்செங்கோடு, கடந்த 17 ஆம் ஆண்டு மே மாதம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் அமுதச் செல்வி, கரூர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா என பல காவலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. 

2018 மார்ச் 7ஆம் தேதி அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ் காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார், அதேபோல் பள்ளிகரணையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 166 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய  குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது, குடும்பச் சூழல், மேலதிகாரிகளின் அழுத்தம், மன அழுத்தம் என பல காரணிகள் உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மகேஸ்வரி திடீரென அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணிச்சுமை காரணமாக உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக  மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாளையங்கோட்டையில் போக்குவரத்து பிரிவில் ஆட் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதால் போக்குவரத்து காவலர்களின் அதிக பணிச்சுமைக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லையை போலவே பாளையங்கோட்டை மிகவும் பரபரப்பான காணப்படும் பகுதி என்பதால் அங்குள்ள போக்குவரத்து போலீசார் அதிக நெருக்கடிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது, இதேபோல நெல்லை மாநகரில் பணிபுரியும் காவலர்களும் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக பல்வேறு காவலர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாகவும், இந்நிலையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் என்பவர் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், இந்த விவகாரம் டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக நெல்லை மாநகரில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணி சுமை காரணமாக மாதம் 24ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார், உயர் அதிகாரிகள் அவரை திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, தமிழக அரசு போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க, வாரத்திற்கு ஒரு முறை கட்டாய விடுப்பு என ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால் முழுமையாக பல இடங்களில் அந்த ஆணை நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் மகேஸ்வரி கடந்தாண்டு சுதந்திர தினத்தின்போது தனது தந்தை உயிர் என்ற செய்தியையும் கேட்டு சுதந்திர தின அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி விட்டு அதன்பிறகு தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆவார். இவரது கணவரும் நெல்லை நுண்ணறிவுப் பிரிவு உதவி காவல் ஆய்வாளராக உள்ளார். காவல்துறைக்கு நேர்மையுடனும், கடமை தவறாது பணியாற்றும் அதிகாரிகளே தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருப்பது காவலர்கள் மத்தியில் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விவகாரம் நிச்சயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.
 

click me!