சர்கார் மேடையில் அரசியல் வேண்டாம்! கண்டிப்பான உத்தரவு போட்ட சன் டிவி!

By sathish kFirst Published Oct 3, 2018, 10:21 AM IST
Highlights

சர்கார் என்ற பெயரில் அரசியல் படம் எடுத்திருந்தாலும் கூட இசை வெளியீட்டு விழா மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனர் முருகதாஸ் உள்ளிட்டோரை சன் டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்ட ஆடிட்டோரியத்தில் சர்கார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் அரசியல் படம் என இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விரல் புரட்சி எனும் பாடலும் அரசியல் கருத்துகளுடன் வெளியாகியுள்ளது. இதனால் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசும் பிரபலங்கள் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.


   
ஆனால் சன் தொலைக்காட்சி நிர்வாகம் மேடையில் பேச உள்ள அனைவரிடமும் அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவிற்கு எதிராக வேலை பார்த்த நடிகர் விஜயை வைத்து சன் குழுமம் திரைப்படம் எடுப்பதை ஏற்கனவே தி.மு.க விரும்பவில்லை. இந்த நிலையில் விழா மேடையில் யாரேனும் அரசியல் பேசி பரபரப்பாகிவிட்டால் தி.மு.கவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றே சன் டி.வி விஜய் உள்ளிட்டோரிடம் அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.


   
இதனை தொடர்ந்தே வழக்கமாக கூட்டத்தை பார்த்துவிட்டால் அரை மணி நேரம் பேசும் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெறும் 5 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டு சென்றார். இதே போல் மேடை கிடைத்தால் சமூக அநீதிக்கு எதிராக பொங்கும் முருகதாசும் கூட சர்கார் படத்தை பற்றியே  பேசிவிட்டு இறங்கிவிட்டார். விஜயும் கூட பேசும் போது பஞ்ச் டயலாக் எல்லாம் பேசினாரே தவிர சமூக பிரச்சனைகள் பற்றி பேசவில்லை.

கடந்த ஆண்டுகளில் மேடை ஏறிய விஜய் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசியிருந்தார். அதுவும் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசியது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகளாக அமைந்திருந்தது. இந்த நிலையில் தனது படத்திற்கு அதுவும் அரசியல் ரீதியான படததிற்கான விழா என்கிற போது விஜய் சமூகம் சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயும் விழா மேடையில் அரசியல் பேசவில்லை.
   
ஆனால் ராதாரவி மட்டும் விஜயை புகழ்ந்து பேசுவதாக கருதி நிகழ்ச்சியை ஒரு மாநாடு என்றும், சமுதாயத்திற்கு விஜய் தேவை என்றும், சமுதாயத்திற்கு விஜய் வர வேண்டும் என்று பேசிவிட்டு சென்றார். அதாவது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் டிவி மட்டும் அல்ல தற்போது தான் இருக்கும் அரசியல் கட்சியான தி.மு.கவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ராதா ரவியும் பெரிதாக சர்ச்சைக்குறிய வகையில் எதுவும் பேசவில்லை.
   
இதனால் நிகழ்சசியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த சன் டிவி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும்.

click me!