
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா என தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு அவரது அரசியல் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்து சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போயிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் போர் வரட்டும் அப்போது களத்தில் இறங்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் விரைவில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது. அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அன்புமணி ராமதாஸ்,சீமான், வேல் முருகன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினி நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ளட்டும் என கடுமை காட்டினர்.
பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி, இன்னும் ஒரு படி மேலே போய், மராத்தியரான ரஜினிகாந்த் தமிழகத்தில அரசியலுக்கு வந்தால் தோல்விதான் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல என்றும் அவர் கர்நாடகாவில் இருந்து வந்த மராத்தியர் என்றும் கூறினார்.தற்போது அவருக்கு அரசியல் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
கடந்த சில நாட்களாக ரஜினியை கடுமையாக தாக்கி கருத்துக்கள் வெளியிட்டு வரும் சுப்ரமணியசாமி, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் படிப்பறிவில்லாத ரஜினிகாந்த், அரசியலுக்கு தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா தற்போது ஜெயிலில் இருப்பதற்கு எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ள சு.சுவாமி, அவரைவிட ரஜினி மோசமானவர், அவர் ஒரு மோசடி பேர்வழி என தெரிவித்துள்ளார்.