எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு மக்களை காப்பதில் கவனம் செலுத்துங்கள்.. அடங்காத ஆர்.பி உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 2:24 PM IST
Highlights

ஒருவர் மீது பழி சுமத்தி தப்பிக்க முடியாது. இதே தோப்பூர் மருத்துவமனையில் நீங்கள் ஆய்வு செய்து உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். நீங்கள் வெளியே சொன்னால் நற்பெயர் முன்னாள் முதலமைச்சருக்கு கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்கள்.

எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து இரண்டு நாளாக திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தற்பொழுது லட்சத்தீவில் தென் கிழக்கு இந்திய கடலில் காற்று வலுவிழந்து டவ்-தே புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால் 10 மாவட்டத்திற்கு இடி மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை இடி மின்னல் ஏற்படும் என்று கூறிப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இது போன்ற பேரிடர் ஏற்படும் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொட்டும் மழையில் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து உரிய அறிவுரை வழங்கினார்.அதேபோல் கஜா புயல், ஓக்கி போன்ற கடுமையான பேரிடர் காலங்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

அதேபோல் மின்சாரம் தாக்கியும், இடி தாக்கியும் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆகவே இதையெல்லாம் முன்மாதிரியாக வைத்துக்கொண்டு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களை உரிய நிவாரண முகாமுக்கு மாற்றிட வேண்டும். அதேபோல் நிவாரண முகாம்களில் தற்போது கோவிட் காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடித்து கிருமி நாசினி, மருத்துவ பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு  சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான உணவு, சுகாதாரமான படுக்கை, சுகாதார கழிப்பறை உருவாக்கித் தர வேண்டும். மீன்வர்களுக்கு உரிய அறிவுரையை வழங்க வேண்டும். மேலும் சூரை காற்று வீசும் பகுதிகளில் மக்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும் புயல் நகர்வை கண்காணித்து வலுவடைகிறதா? இல்லை வலுவிழுக்கிறதா? என்று அரசு கண்காணிக்க வேண்டும். 

தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் எங்கள் மீது பழி சுமத்துகிறார். இதே முதல் அலையின் போது  மதுரை மாவட்டத்தில் 18 சதவீதம் பாதிப்பு இருந்த பொழுது போர்க்கால நடவடிக்கை முன்னாள் முதலமைச்சர் மேற்கொண்டு அதை 0.5 விதமாக குறைத்தார். மேலும் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதி உள்ளிட்டவை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது. வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோய் தொற்றர்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில்  உள்ள மக்களுக்கு தேவையான பலசரக்கு மருந்து உள்ளிட்ட அனைத்தையும் அவர்களுக்கு வழங்க தேவையான அலுவலர்கள்  ஒதுக்கப்பட்டனர். முதல் அலையில் நாங்கள் எப்படி எதிர்கொண்டு மக்களின் பாராட்டு பெற்றோம் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது நாங்கள்  செய்த நடைமுறையை தெரிந்துகொண்டு அவர்கள் ஆய்வு பணி செய்ய வேண்டும். 

ஒருவர் மீது பழி சுமத்தி தப்பிக்க முடியாது. இதே தோப்பூர் மருத்துவமனையில் நீங்கள் ஆய்வு செய்து உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். நீங்கள் வெளியே சொன்னால் நற்பெயர் முன்னாள் முதலமைச்சருக்கு கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்கள். எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மறந்து மக்களுக்கு கடுமையான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
 

click me!