நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது.
இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.
இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் படித்தவருக்கு தகுந்த அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் குடும்பத்தினரிடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியபோது அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
இதைதொடர்ந்து திமுக சார்பில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் காசோலையை அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கி.வீரமணி, உள்ளிட்டோர் கலைந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்டுப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.