நெல்லையின் முதல் பெண் மேயராக சிறப்பு சேர்த்தவர் உமா மகேஸ்வரி !! ஸ்டாலின் இரங்கல் !!

By Selvanayagam PFirst Published Jul 23, 2019, 10:19 PM IST
Highlights


திருநெல்வேலி முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு திடுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம் பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல - ஆண்களுக்கு நிகராக, சமமாகப் பொறுப்புகளை வழங்கும் இயக்கும் என்பதற்கிணங்க, 1996ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கழக பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
 
நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற அவர், எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர். 

2011-ல் நடைபெற்ற கழக கழக முப்பெரும் விழாவில் தலைவர் கருணாநிதியால்   “பாவேந்தர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டவர். கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணித் தலைவர், மற்றும் மாவட்ட துணை செயலாளராக இருந்த அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியில் தி.மு.க.  நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. 


முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

click me!