
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் எய்ம்ஸ் ருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்" என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக மக்களுக்கு உலகத் தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் மூன்று நிதி நிலை அறிக்கைகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பாஜக அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் இந்த தாமதம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த 5 இடங்களிலும் கடந்த 2015ம் ஆண்டே மத்திய குழு ஆய்வு செய்துவிட்டது. அந்த இடங்களுக்கு அருகே உள்ள கல்லூரிகள், பள்ளிகள் குறித்த விவரங்களை மாநில அரசு, காலம் தாழ்த்தியே மத்திய அரசுக்கு அனுப்பியது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை மத்திய மாநில அரசுகள் முடிவு செய்யவில்லை.
மாநில நலன்களுக்காக மத்திய அரசுடன் ஒத்துப்போகிறோம் என்று அரசு செலவில் விழா நடத்தி, வீண் தம்பட்டம் அடித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கொண்டு வர முடியாமல் செயலிழந்து நிற்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும்", என்று 2017-18 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்ட நிலையில், அதற்கு முன்பே 2015-16 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் நடத்தும் நாடகமே காரணம்.
தமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள அதிமுக அரசுக்கோ, சுகாதாரத் துறை அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.