இப்போது விட்டால் எப்போதும் இல்லை.. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முன்வைக்கப்படும் தென்மாவட்ட ஜாதி அரசியல்..!

By Selva KathirFirst Published Aug 20, 2020, 11:27 AM IST
Highlights

அதிமுகவில் அதிகாரம் பொருந்திய நபர்கள், அமைச்சர்கள் எல்லாம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்கிற நிலை மாறியுள்ள நிலையில் தற்போது விட்டால் அந்த நிலையை நாம் எப்போதும் பிடிக்க முடியாது என்று ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜாதிய ரீதியாக காய் நகர்த்தப்படுகிறது.

அதிமுகவில் அதிகாரம் பொருந்திய நபர்கள், அமைச்சர்கள் எல்லாம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்கிற நிலை மாறியுள்ள நிலையில் தற்போது விட்டால் அந்த நிலையை நாம் எப்போதும் பிடிக்க முடியாது என்று ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜாதிய ரீதியாக காய் நகர்த்தப்படுகிறது.

எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவிற்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் அதிமுக பலமாக இருந்தாலும் எம்ஜிஆரும் சரி ஜெயலலிதாவும் சரி தென் மாவட்டத்தில் அதிலும் ஆண்டிப்பட்டியில் தான் தேர்தல் களத்தில் இறங்கினர். இதற்கு காரணம் முக்குலத்தோர் வாக்குகள் தங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பியது தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவில் எப்போதும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் மேலிடத்திற்கு நெருக்கமாக இருப்பார்கள்.

உதாரணமாக 2011ம் ஆண்டு ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது அமைச்சரவையில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் அய்யாறு வாண்டையார் இடம் பிடித்தார். அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு ஓபிஎஸ் வந்தார். இந்த நிலை ஜெயலலிதா மறையும் வரை இருந்தது. 2016ல் ஓபிஎஸ் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.

இதே போல் அதிமுகவில் சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் முக்குலத்தோருக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்படும். இப்படி ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் முக்குலத்தோர் தான் அதிகாரமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஆனால் எடப்பாடியார் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

தமிழக அரசில் தற்போது எடப்பாடிக்கு அடுத்தபடியாக எஸ்பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் தான் உள்ளனர். கட்சியில் எந்த பிரச்சனை என்றாலும் அதனை சரி செய்யக்கூடிய நிலையிலும் இவர்கள் தான் உள்ளனர். முதலமைச்சரிடம் எந்த காரியம் ஆக வேண்டும் என்றாலும் இவர்கள் இருவர் மூலமாகத்தான் நிறைவேறும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றனர். இவர்கள் இருவர் தவிர அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக ஒரே ஒரு வார்த்தை கூறினால் என்பதற்காக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார்.

மணிகண்டன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு காலத்தில் கோட்டையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சமுதாயத்தை சேர்ந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டுவிட்டால் அதிமுக முழுக்க முழுக்க மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பிடியில் சென்றுவிடும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அனுமதித்துவிட்டால் அதன் பிறகு ஓபிஎஸ் கட்சியில் முக்கிய பதவியில் நீடிக்க முடியாது.

எனவே இப்போது எடப்பாடியாருக்கு வேகத்தடை போட்டால் மட்டுமே முக்குலத்தோர் இழந்த செல்வாக்கை பெற முடியும் அதற்கு முக்குலத்தோர் ஓபிஎஸ் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். இந்த ஜாதிய லாபி காரணமாகவே அமைச்சர்கள் சிலர் எடப்பாடியை வெளிப்படையாக ஆதரிக்க தயங்குவதாக சொல்கிறார்கள். அதிலும் தென்மாவட்டத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க காரணம் எடப்பாடியை ஆதரித்தால் ஜாதி ரீதியாக சொந்த ஊரில் பின்னடைவைசந்திகக் நேரிடும்என்று அவர்கள் அஞ்சுவதாக சொல்கிறார்கள்.

click me!