அரசியலில் சொதப்புவது எப்படி? அழகிரிக்கு பாடம் கற்றுக்கொடுத்த முக்கியத் தலைவர்..!

By manimegalai aFirst Published Feb 11, 2019, 11:29 AM IST
Highlights

முதல்  அறிக்கையிலேயே குளறுபடி ஆனதால் புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அப்செட் ஆகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்  அறிக்கையிலேயே குளறுபடி ஆனதால் புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அப்செட் ஆகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 திமுகவுடன் கூட்டணி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தைத் தாண்டி, “அவரசக் கைக்குலுக்களில் எங்கள் கை அசுத்தமாகிவிடக் கூடாது” என்று கூறியது திமுக தலைவர் ஸ்டாலினை ரொம்பவே சீண்டிவிட்டது. கமலுக்குப் பதில் அளிக்கும் வகையில், திமுக எம்.எல்.ஏ.வும். நடிகருமான வாகை சந்திரசேகரை வைத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனை திமுக கடுமையாக தாக்கியிருந்தது. அரசியல் அரங்கில் இந்த விவகாரம் சூடாகிப்போனது.

இதற்கிடையே கமல் பேட்டிக்கு சந்திரசேகர் அறிக்கைக்கும் அடுத்த நாளே, ‘காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வர வேண்டும்’ என்று கமலுக்கு காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்புவிடுத்தார். காங்கிரஸின் இந்த அழைப்பு திமுகவினரை கோபம் கொள்ள செய்தது. கூட்டணிக்கு தலைமை திமுகதான் என்பதால், திமுகவினரின் கோபம் இன்னும் இரட்டிப்பானது. கமலுக்கு அழகிரி அழைப்பு விடுத்ததைப் பார்த்து காங்கிரஸ்காரர்களும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். குறிப்பாகத் தேர்தலில் போட்டியிட காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், கே.எஸ். அழகிரியைத் தொடர்புகொண்டு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இந்த விஷயத்தை சிலர், காங்கிரஸ் தலைமை வரை கொண்டு சென்றுவிட்டனர்.

 நிலைமை மோசமடையவே, திமுகவைத் தாக்கி பேட்டி அளித்த கமலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் அழகிரி. அதில், “பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.” என்று தெரிவித்திருந்தார். திமுகவை கூல் செய்ய வெளியிட்ட இந்த அறிக்கையும் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. இந்தத்  தகவல் யுகத்தில் கொஞ்சம்கூட அப்டேட் இல்லாதவர் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின்  தலைவராக ஆகியிருக்கிறாரே என்று காங்கிரஸ் கோஷ்டிகள் கோபத்தில் கொப்பளித்துகொண்டிருக்கின்றன.

இதனால், கே.எஸ். அழகிரி அப்செட் ஆகிவிட்டதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. அவருக்கு வேண்டப்பட்ட முக்கிய தலைவர் அழைத்து, அழகிரிக்கு அரசியல் பாடம் எடுத்ததாகவும் காங்கிரஸ்காரர்கள் முணுமுணுக்கிறார்கள்.

 

click me!